Friday, October 22, 2010

வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச்சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்றுள்ளனர்



டாக¢டர¢ வா. செ. குழந்தைசாம¤

        தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகளில் சீரமைப்புத் தேவை எனப¢ பெரியார் அவர்கள் பரிந்துரைத்ததைப் பல அறிஞர்கள் ஏற்றுள்ளனர்.  சீரமைப்பின் இன்றியமையாமையையும் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்துள்ளனர்.  கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த மாபெரும் தமிழறிஞர் திரு. கி.வா.ஜ., அவர்கள் பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுபவர்.  தேவையென்பது தெளிவாக இருந்தால் ஒழிய மாற்றத்தை எளிதில் ஏற்பவர் அல்லர். அவரும் ஜனவரி 1979 கலைமகள் இதழில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகட்குக் குறியீடுகளைப் பயன்படுத்தினால். நான்கு குறியீடுகள் போதும். 68 குறியீடுகள் குறையும் என எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவரே ஆவர்.  இருப்பினும் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ஏற்கேன்என்ற குழுவில் இருந்தவர் அல்லர்.  இந்தப் பிரச்சினையைக் கவனத்தோடும், கவலையோடும் அணுகியவர். நீண்ட வாதங்கட்குப் பின் 19.03.1989 - இல் அவருடைய பத்திரிகையான செங்கோல் இதழில், நாம் முன்பு கூறிய நான்கு வரிசைகளில் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு

   “இதற்கு மேல் எத்தகைய சீர்திருத்தமும் தமிழ் 
    எழுத்துகளுக்குத் தேவையில்லை

என்று தமது கட்டுரையை முடித்திருக்கிறார்.

        பேராசிரியர் தெ.பொ.மீ., பேரா. மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற தலை சிறந்த மொழியியல் துறை, மொழித் துறை, கல்வெட்டுத் துறைப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் முழுமனத்தோடு ஆதரித்திருக்கின்றனர்.  தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் தி. முத்து கண்ணப்பர், புலவர் குழந்தை, பேரா. அப்பாதுரை போன்றவர்களின் களங்கமற்ற தமிழ்ப் பற்றில், புலமையில் யாருக்கும் ஐயமிராது. இவர்களெல்லாம் தமிழுக்கு இன்றும் நாளையும் பெருமை சேர்க்கும் எதையும் புறக்கணிப்பவர்கள் அல்லர்.  ஐயத்திற்குரிய எதையும் ஆதரிப்பவர்கள் அல்லர்.  இவர்கள் அனைவரும் தயக்கங்காட்டாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதிகளே யாவர்.

        இரண்டாவதாக இத்தகைய மாற்றங்களை நாம் தான் செய்கிறோம் என்பது இல்லை. இந்திய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர்.  அந்நிய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர்.  பழமையான மொழிகள் அனைத்தினும் பழமையானது சீன மொழி. சீனாவில் பொதுவுடைமை அரசு செய்த முக்கியமான செயல்களில் ஒன்று, ஆட்சி ஏற்ற சில ஆண்டுகட்குள்-1954-இல்-ஒரு மொழிச் சீர்திருத்தக் குழுவை அமைத்து பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட அந்த மொழியில் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளத் தேவையான எழுத்துகளை 2236 எனக் குறைத்தது ஆகும். ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழி எல்லாத் துறைகளிலும் சிறப்புடையது. தத்துவத் துறையின் தாய் மொழி என்றே கூறலாம்.  அந்த மொழி காத்திக் [Gothic]  வரிவடிவத்தில் தான் எழுதப்பட்டு வந்தது. 1930-களில் முழுமையாக ரோமன் வரிவடிவத்திற்குப் போய் விட்டார்கள். இந்தோனேசிய மொழிக் குடும்பத்தினரும் பழைய வரிவடிவத்தைக் கைவிட்டு விட்டு ரோமன் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டனர்.  மலேசிய மொழியும் ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டது.

        நாம் இந்தியாவுக்கு வருவோம். மலையாள மொழியில் குறியீடுகள் ஏராளம், கேரள அரசு திரு. குஞ்சன் பிள்ளை தலைமையில் மார்ச் 2, 1967-இல் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதை மீள் ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் பயன்படுத்தி வந்த குறியீடுகளில் 75 சதவிகிதத்தைக் குறைத்து, மலையாள மொழியின் வரிவடிவத்தை மிகப் பெரிய அளவில் எளிமையாக்கிவிட்டனர். அதனால் மலையாள மொழியின் வளர்ச்சி தழைத்ததே அன்றித் தாழவில்லை, தளரவில்லை.  இந்தி மொழியின் உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் இவற்றிற்குத் குறில் இல்லை.  இவற்றில் நெடில்கள் மட்டுமே உள்ளன.  மேலும் ள, ழ ஆகிய ஒலிகள் இல்லை.  ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் இந்தி மொழியின் வரிவடிவத்தில் இந்த நான்கு ஒலிகட்கும் புதிய குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்.

        வரிவடிவ ஒற்றுமையை, வலிமைக்கு ஒரு உத்தியாக நாம் இந்தி மொழியில் பார்க்கலாம். இந்தியின் பிரிவுகளான கடிபோலி, போஜ்புரி, மைதிலி ஆகியன தம்முள் பெரிதும் மாறுபடுபவை.  சாகித்ய அகாதமியில் இந்தி மொழி தவிர்த்து அதன் ஒரு பிரிவான மைதிலிக்கும் தனியாக ஒரு விருதுண்டு. இந்த மொழிப் பிரிவுகளைப் பேசினால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது கடினம்.  ஆனால் அவை ஒரே வரிவடிவத்தைக் கொண்டிருப்பதால் இந்தி என்பது ஒரு மொழி போன்ற தோற்றம் பெற்றிருப்பதையும் அதனால் அது பெரும்பான்மையர் மொழி என்று விளங்குவதையும் காண்கிறோம். 

        பொதுவாக வரிவடிவத்தில் சில மாற்றங்கள் என்பது பாரதூரமான புரட்சிகரமான சிந்தனை அன்று.  தமிழ் வரிவடிவம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் கி.பி. 19 வரையிலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து மாறியே வந்திருக்கிறது.  உயிர் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படம்-1-இல் காணலாம்.  இன்றைய தமிழ் எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது பண¢டைய தமிழ் வரிவடிவம் ம¤கவும¢ எளிதானதாகவே இருந்திருக்கிறது.

படம்-1. கால வளர்ச்சியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம்




               
        தமிழ் மறையான திருக்குறளை எழுதுவதற்கு வள்ளுவர் பயன்படுத்தியிருக்கக் கூடிய தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவம் படம்-2-இல் கொடுக்கப்பட்டுள்ளது.

        படம்-2 வள்ளுவர் பயன்படுத்திய வரிவடிவம்: உயிர் எழுத்துகள்
         
        இந்த மாபெரும் வரிவடிவ மாற்றத்தால் வள்ளுவமும் மறைந்துவிடவில்லை, தமிழுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடவில்லை.  நாம் முன்பே கூறியது போல ஒலி நிரந்தரமானது; வரிவடிவம் மாறி வருவது.

        உயிர் மெய் எழுத்துகட்கு வரும் பொழுது நமது முன்னோர்கள் செப்பேடுகளில் குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நான்கு சான்றுகள் படம்-3-இல் கொடுக்கப்பட்டுள்ளன.  படம்-3 a என்ற பிரிவில் உயிர் எழுத்துக்கே மிக எளிதாக வலது பக்கத்தில் வட்டெழுத்தில் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உகர நெடிலுக்கு, உகரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்னொரு எழுத்து-ளகரம்-சவாரி செய்வதற்குப் பதிலாக உகரத்தின் வலது புறத்தில் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது எளிதானது, எழிலுடையதும் கூட என நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்குப் பாடம் புகட்டுவதாகும். மேலும் 3b, படத்தில் உயிர் மெய் து-கரத்திற்குக் குறியீட்டைப் பயன் படுத்தியிருப்பதையும், படம்-3c-இல் உயிர் மெய் பி-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும¢, உயிர்மெய் ஐ-காரத்திற்கு, பெரியார் நம் காலத்தில் பயன்படுத்திய சங்கிலிக் கொம்பை பள்ளன் கோவில் செப்பேட்டில் அன்றே பயன்படுத்தி இருப்பதையும் படம் 3-d-இல் காணலாம்.

1.         நாம் கூறும் மாற்றம் நடைமுறையில் எட்டுச் செங்குத்து வரிசைகளில் 144 எழுத்துகட்கு நாம் இப்பொழுது பயன்படுத்தும் முறையாகும். இதே முறையை மீதமுள்ள நான்கு செங்குத்து வரிசைகட்கும் பயன்படுத்தலாம் என்பதுதான்  நாம் முன்வைக்கும் சீர்திருத்தம்.  இதில் புரட்சியும் இல்லை.  புதுமையும் இல்லை.  நம்மையுமறியாது நாம் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வரும் பாரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறோம்
2.   நாம் கூறும் மாற்றம் உயிர் மெய் எழுத்துகள் வரிசையில் முழுமையாக ஒரு சீர்மையை உருவாக்குகிறது. சீர்மை எளிமைக்கு அடிப்படை. 

3.  தமிழ் கற்க முயலும் அயலகத் தமிழ்க் குழுந்தைகள் ஒருபுறம், மற்றும் முக்கியமாகத் தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் தமிழ் கற்கும் 15 இலட்சம் குழுந்தைகள் மறுபுறம் எனக் குழந்தைகள் தமிழ் கற்பதைப் பெரிதும் எளிதாக்குகிறது. கற்க வேண்டிய குறியீடுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கிறது. இது மாபெரும் சமுதாய நன்மை என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கு இடமில்லை. இந்தச் சிறிய மாற்றத்தினால் இன்றோ அல்லது நாம் கற்பனை செய்யத்தக்க அளவில் எதிர்காலத்திலோ தமிழ் மொழிக்கு எவ்விதமான தீங்கும் நேர அணுஅளவும் வாய்ப்பில்லை.

        விரைவே வெற்றியின் அடிப்படை என்பதைக் கொள்கையாகக் கொண்ட 21-ஆவது நூற்றாண்டில் இந்த மாற்றம் காலத்துக் கேற்றது என்பது மட்டுமின்றித் தவிர்க்க இயலாத, இன்று இல்லாவிட்டால் நாளை இடம் பெற வேண்டிய மாற்றமேயாகும்.
 
 

 மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடையில் விளக்கிய பொழுது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.  மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட, இவ்வளவு எளிய சீர்த்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பினார்கள்.  அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில்:

    இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்;  
    மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட. ஆனால் 
    நடைமுறைப் படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் 
    காத்திருக்கிறது

என்பதுதான். தலைவர்கள் தாமாக உருவாவதில்லை.  நாம் தான் உருவாக்கவேண்டும்.

        மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை
       வையத்தின் விதிஇதற்கு மாற்றமில்லை
                               
                          - இது டார்வினின் [Darwin] தத்துவம்


Sunday, October 10, 2010

தமிழ் வரிவடிவச்சீரமைப்பு : இனப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது



டாக்டர் வா.செ. குழந்தைசாமி

                ஏறத்தாழ 2300 ஆண்டுகட்கு முன் பனம்பாரனார்

                                வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத்
                                தமிழ் கூறும் நல்லுலகம்

என்று தமிழக எல்லைகளை வரையறுத்தார்.  அவை காலப் போக்கில் சுருங்கி விட்டன என்றாலும் தமிழர்கள் இன்று தமிழக எல்லைகள் தாண்டி, இந்திய மாநிலங்களிலும், இலங்கை முதல் அறுபதுக்கு மேற்பட்ட அயல் நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

புவனமும் மானுடர்க்குப் பொதுவெனும் தமிழச் சாதி
குவலயக் குடும்பம்

என்பான் கவிஞன்.  எனவே தமிழர்கள் இன்று இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு மாநில மக்கள் மட்டும் அல்லர்.  இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்பவர்கள் மட்டும் அல்லர்.  அவர்கள்

            இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்
            பந்திடை அமைந்த நாடு பலவினும் பரவி

வாழ்பவர்கள். தமிழர்களை உலகம் இந்திய மக்களாக மட்டும் பார்க்கவில்லை.  உலகம் தெற்கு ஆசிய மக்களாகப் பார்க்கிறது.  உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பமாகவும் பார்க்கிறது.  இந்த உண்மையை நிலை நிறுத்த நாம் சில சான்றுகள் காண்போம்.

1.      பிரித்தானிய நாட்டின் B.B.C எனும் ஊடக வாரியம் உலகறிந்தது.  அதன் வானொலி 32 மொழிகளில் ஒலிபரப்புகிறது. இந்திய மொழிகளில் உருது, பாக்கிஸ்தானின் ஆட்சி மொழி. வங்க மொழி, வங்காள நாட்டின் ஆட்சி மொழி. இவை தவிர்த்து மீதமுள்ள 20 இந்திய மொழிகளில், B.B.C இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் ஒலிபரப்புகிறது.  எண்ணிக்கை என்று பார்த்தால் மராத்தி பேசுபவர்கள் அதிகம்: தெலுங்கு பேசுபவர்கள் அதிகம்.  ஆனால் B.B.C இந்தி தவிர்த்து தமிழில் மட்டும் ஒலிபரப்புவதன் காரணம், தமிழ் இந்திய மொழி மட்டுமன்று.  அது தெற்கு ஆசிய மொழியுமாகும் என்று மதிப்பிடப்படுகிறது என்பதுதான்.

2.     சீன வானொலி, 42 மொழிகளில் ஒலிபரப்புகிறது.  அவற்றுள், மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டும் தான் இடம் பெறுகின்றன.

3.       பாரிசில் உள்ள UNESCO நிறுவனம் ஒரு சர்வதேச அமைப்பு. அது அண்மைக் காலம் வரை COURIER என்ற ஒரு மாத இதழை 30-க்கு மேற்பட்ட மொழிகளில் நடத்தி வந்தது. அந்த இதழும் இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் வெளியிடப்பட்டது. 

4.      உண்மையில் தமிழ் இன்று உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி.  தமிழர்கள் நிலையைச் சற்று விளக்கமாகச் சொல்வதானால், 

     தமிழர்கள் ஒரு மொழியினர். பல நாட்டினர். எல்லா நாட்டிலும் சிறு பான்மையர் - இந்தியா உட்பட.

     நாம் நம்மை இந்தியாவின் ஒரு மாநில மக்கள் என்ற பரிமாணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.  இந்தியாவில் நாம் பல மாநிலங்களிலும், இந்திய எல்லைகள் தாண்டி அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி வாழும் மொழிக் குடும்பத்தினர்.  நமது சொல்லின் செயலின் அலைகள், தமிழக எல்லைகள் தாண்டி, இந்தியாவின் மற்ற மாநிலங்கட்கும் விரியும் தன்மை கொண்டவை.  அது மட்டுமின்றி மற்ற நாடுகட்கும் விரியும் தன்மை கொண்டவை.  எனவே நமது சொல்லில், செயலில் நாம் ஒரு பன்னாட்டுச் சிறுபான்மை இனம் என்பதை எங்கும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நினைவிற் கொள்ள வேண்டும். நமது கலை, இலக்கியம், மொழி தொடர்பான அணுகுமுறையிலும் இந்த உணர்வு பிரதிபலிக்க வேண்டும்.

எல்லா நாடுகளிலும், நாம் முன்பே கூறியது போல, பெரும்பான்மையரிடையே சிறுபான்மையராகத் தமிழினம் வாழ்கிறது.  பெரும்பான்மை என்பது ஒரு சக்தி வாய்ந்த திரவம் போன்றது.  அதில் சிறுபான்மை கரைந்து, கலந்து, காலப் போக்கில் மறைந்து விடக் கூடும். இதைத் தவிர்ப்பதற்குச் சிறுபான்மையர் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும்.

       தமிழர்கள் பல மதத்தினர். அவர்கட்குச் சமயம் அடையாளமன்று.  அவர்கள் பல நாட்டினர். எனவே நாடும் ஓர் அடையாளமன்றுஆனால் தமிழர்கள் ஒரு மொழியினர்.  அவர்கட்குத் தமிழ்தான் அடையாளம். அவர்கள் என்றெனினும், எங்கெனினும் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்க வேண்டும்.

        உலகத் தமிழர்களில் ஏறத்தாழ 20 சதவீதத்தினர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள்.  இந்திய மொழிக் குடும்பத்தினரில் சதவீத அளவில் அதிகமாக உலகு தழுவி வாழ்பவர்கள் தமிழர்கள் தான். இந்திய எல்லைகட்கு வெளியே இரண்டு நாடுகளில் [இலங்கை, சிங்கப்பூர்] தேசிய ஆட்சி மொழி என்ற பெருமையும் இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு.  பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழி [Recognised language]  என்ற தகுதியும் தமிழுக்கு உண்டு. 

இன்று ஃபிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் ரெயூனியன் [Reunion] தீவை எடுத்துக் கொண்டால், அங்கு வாழும் மொழிக் குடும்பத்தினரில் மற்ற மொழிகளைவிட அதிகமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பாரம்பரியத்தினர்தான்.  அவர்கட்குத் தமிழ் தெரியாது.  தீச்சட்டி ஏந்துவதும், காவடி தூக்குவதும் தான், உலகில் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்களுடைய பாரம்பரியத்திற்கு அடையாளம். இப்பொழுது சில பள்ளிகளில் தமிழ் கற்பிக்கிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அங்கு இரண்டு மையங்களை அமைத்து, அங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் உதவியுடன் தமிழ் கற்பித்து வருகிறது.  என்றோ ஒரு நாள் ரெயூனியன் தீவு சுதந்திரம் பெறும்.  அப்பொழுது நடக்கும் ஆட்சியில் தமிழ் மொழிப் பாரம்பரியத்தினர் பெரும்பான்மை மொழிப் பிரிவாக இருப்பர்.  அவர்கள் தமிழும் கற்றிருந்தால் ரெயூனியன் தீவிலாவது பெரும்பான்மை மொழியினர் என்னும் பெருமை தமிழுக்குக் கிடைக்கும்.  எனது ஏழை மனத்தில் இப்படியும் ஓர் ஆசை. என்றோ ஒரு நாள் இது நடக்கலாம்.  நடக்க வேண்டும்.

ஒரு மொழிக்கு இலக்கணம் முக்கியம்.  இலக்கியம் முக்கியம். இவை இரண்டை¬யும் விட, பேசுபவர்களின் எண்ணிக்கை முக்கியம். உலகில் வடமொழி உண்மையிலேயே வியக்கத்தக்க இலக்கண, இலக்கிய வளம் படைத்த பண்டை மொழி.  ஆனால் அது பேசுவாரின்மையால் வழக்கிழந்த மொழியாகிவிட்டது. எனவே பேசுபவர் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்கு ஒப்பான மொழிப் பாதுகாப்பு வேறில்லை, அதற்காக நாம் முறையானதாக, எந்த மாற்றமும் செய்யலாம். எந்த விலையும் கொடுக்கலாம். அயலகத் தமிழர்களின் எண்ணிக்கை நமக்குப் பெரிய அளவில் வலிமை சேர்ப்ப, இலங்கைப் பிரச்சினையில் கூட, தமிழகத்தின் தமிழினக் குரலை விட உலகத் தமிழர்கள் குரல் தான் ஓங்கி ஒலித்தது.  ஒற்றுமையாகவும் ஒலித்தது.  அந்த வலிமை மேலும் வலுப்பெற, தொடர, உலகத் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும்.  அதற்கு அவர்கள் தமிழ் கற்க வேண்டும்.  அவர்கள் தமிழ் கற்பதை ஊக்குவிக்க நாம் இயன்றவரை தமிழ் கற்பதை எளிதாக்க வேண்டும். எளிதாக்கும் முயற்சியில் தமிழ் வரிவடிவமைப்புச் சீரமைப்பும் ஒரு முக்கியமான பகுதியாகும்.

இந்தியாவில் தமிழ் தவிர, மற்ற மொழிக் குடும்பத்தினர் - திராவிட மொழிக் குடும்பத்தினர் உட்பட - தங்களை வடமொழி சார்ந்தவர்களாகவே எண்ணுகிறார்கள்.  தங்கள் மொழியின் வேரும் வடமொழியே எனக்கூடக் கூறுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.  தனித்து நிற்பவர்கள் நாம்தான்.  தனிமைப்பட்டு நிற்பவர்களும் நாம்தான்.  சான்றாக, இந்திய மொழிகளில் கலைச் சொற்கள் உருவாக்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கீழ்க்காணும் மூன்று உத்திகளைக் கடைப் பிடிக்க முடிவு செய்தது.

1.    தேவையான இடங்களில் சர்வதேசக் கலைச் சொற்களை [International technical terms] ஏற்கலாம்
2.    அடுத்த கட்டமாக அகில இந்தியக் கலைச் சொற்களை [Pan Indian technical terms] உருவாக்கலாம்.
3.    இறுதியாக, அந்தந்த மொழிகளில் கலைச் சொற்களை [Technical terms in individual languages] படைக்கலாம்.

அகில இந்தியக் கலைச் சொற்கள் என்பவை வடமொழி வேர்களைக் கொண்டவை.  அவற்றை மற்ற மொழியினர் ஏற்கின்றனர்.  நாம் ஏற்க மறுக்கிறோம்.  மறுப்பதில் நமக்குள் இருக்கும் ஒற்றுமை, மாற்று வழி காண்பதில் இல்லை. மாற்று வழி காண முனைப்பில்லாது மறுப்பைப் பதிவு செய்து விட்டு எழுந்து போவதால் ஒரு சமுதாயத்திற்கு நன்மை இல்லை.  பொதுவாக ஒருங்கிணைப்பவர்கட்கு எதிர்காலம் உண்டு.  ஒதுங்கி நிற்பவர்கள் தங்கள் வலிமைக்கு வழிகாண வேண்டும். சார்ந்து நிற்பவர்கட்குக் கொழுகொம்பு உண்டு.  தனித்து நிற்பவர்கள் தங்கள் வலிமைக்கு வேரின் ஆழத்தையும் விழுதின் விரிவையும் நம்பித்தான் இருக்க வேண்டும்.  அனைத்தையும் கூட்டிக் கழித்து, அளவிட்டுப் பார்ப்போமானால், சாதி கடந்து, மதம் கடந்து, நாடுகளும் கடந்து

தொன்றுள பிறப்பின் தொடர்போ, நாடோ,
இன்றுள நடைமுறை இயல்போ, மேனியின்
நிறமோ சமயமோ, நியதியோ வாழ்வின்
அறமோ தமிழரின் அறிகுறி காட்டும்
உரைகல் அன்று; தம் உணர்வின் ஊற்றுகள்
கறையில வாகக் கன்னித் தமிழ்எம(து)
அன்னை யென்பவர் அனைவரும் தமிழரே

என்ற உள்ளத்துடன், உணர்வுடன் தமிழர்களின் வலிமையை ஒருங்கிணைக்க வேண்டும். தமிழர்களின் எதிர்காலத்திற்கு, உலகத் தமிழர்களின் வலிமை இன்றியமையாத தேவை. அதை உறுதிப்படுத்திக் கொள்ள உலகத் தமிழர்கள், பரம்பரை, பரம்பரையாகத் தமிழர்களாக, தமிழ் மரபொடு, தமிழர் வாழ்வொடு தொடர்புள்ளவர்களாக வாழவேண்டும்.  அதற்கு அவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ்ப் பாரம்பரியத்தைக் காலத்துக் கேற்ற மாற்றங்களுடன் காப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப உதவும் தலைமையைத் தமிழகத் தமிழ் அறிஞர்கள் ஏற்க வேண்டும்.

அயலகத் தமிழர்கட்கு - இலங்கை, சிங்கப்பூர் தவிர - தமிழ் பொருளாதாரத் தேவை அன்று.  அரசியல் தேவை அன்று.  சமுதாயத் தேவையுமன்று.  தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை மட்டுமே. அவர்கள் தமிழ் கற்க, தமிழ் கற்பது எளிதாக்கப்பட வேண்டும்.  அதற்கு முதற்படியாக எழுத்துகளைக் கற்பது, இயன்ற வரை, எளிதாக்கப் பட வேண்டும். அயலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் ரோமன் வரிவடித்தை [ஆங்கில எழுத்துகளை] பயன்படுத்தும் ஏதாவது ஒரு மொழியொடு தொடர்புள்ளவர்களாகவே இருக்கின்றனர்.  எனவே ஒரு மொழி என்றால், எளிய வடிவங்களில் அமைந்த 26 எழுத்துகள் எனப் பழக்கப்பட்டுப்போன அவர்களுடைய குழந்தைகள், கட்டாயத் தேவை என்பது இல்லாத நிலையில், மிகவும் சிக்கலான வரிவடிங்களைக் கொண்ட 247 தமிழ் எழுத்துகளை உறுதியாக நீண்ட கால அளவில் கற்க மாட்டார்கள்.  இந்த உண்மை நிலையை நாம் எதிர் கொள்ள வேண்டும். 21-ஆவது நூற்றாண்டுச் சமுதாயம் எளிமை, விரைவு, எனும் இரு சக்கரங்களில் ஓடும் ஊர்தியில் மாற்றம் எனும் குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இத்தகைய ஊர்தியில் ஏறமறுக்கும் சமுதாயத்தை, விட்டு விட்டு, உலகம் மேலே சென்று விடும்.

                                அரைமணி நேரம் நின்றேன் யான்
                                ஆயிரம் காதம் பின்னடைந்தேன்

என்பது 21-ஆவது நூற்றாண்டுத் தத்துவம்.  இந்தப் பின்னணியில் நாம் எழுத்துச் சீர்திருத்தத்தம் பற்றிய பிரச்சினையை:

  • ஆழ்ந்த புரிதலுடன்
  • திறந்த மனத்துடன் [Understanding]

அணுக வேண்டும். இங்கு ஒரு தகவலை வலியுறுத்துவது முறையாகும். அது பின்வருமாறு:

  • நாம் கூறும் எழுத்துச் சீரமைப்பு. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளில், ஒரு காற்புள்ளியளவு கூட எதையும் குறைப்பதன்று. 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு இப்பொழுது அவற்றை 107 குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 39-ஆகக் குறைத்து, குழந்தைகள் கற்பதை எளிதாக்குவதுதான் சீரமைப்பின் நோக்கம்.

  • நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பு எளியது: ஆலின் விதை போன்றது. ஆனால் விளைவில் நன்மையில், அதன் வேரும், விழுதும் போன்றது. மேலும் விபரங்கட்கு தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பற்றிய கட்டுரையைப் பார்க்கலாம்.


Thursday, October 7, 2010

தமிழ் வரிவடிவச் சீரமைப்பு


டாக்டர் வா.செ. குழந்தைசாமி

                மனித சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் மொழிகட்கு ஒலிகள்தான் அடிப்படை. ஒலிகள் நிரந்தரமானவை.  நீண்ட இடைவெளிகட்கிடையில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம்.  வரிவடிவம் ஒலிக்கு நாம் பயன்படுத்தும் குறியீடுகள், வரிவடிவம் காலத்துக்கேற்ப மாறக்கூடியது.  எழுது பொருள், எழுதுகருவிக்கேற்ப மாறியே வந்திருக்கிறது. இன்று நமது சுருக்கெழுத்தாளர்கள் பயன்படுத்தும் வரிவடிவமும் தமிழ்தான்.  வரிவடிவத்தால் மொழி மாறுவதில்லை. தமிழ் வரிவடித்தில் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் ஏற்பட்ட மாற்றங்களைப் படம் 1 - இல் காணலாம்.

ஒரு மொழிக்கு உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்பவைதான் அடிப்படை.  தொல்காப்பியமும்

                                எழுத்தெனப் படுப
                                அகர முதல் னகர இறுவாய்
                                முப்பஃது என்ப

என்றே கூறுகிறது.  ஐரோப்பிய மொழிகளில் உயிர்மெய் எழுத்துகள் இல்லை, மத்திய ஆசிய மொழிகளிலும் உயிர்மெய்க் குறியீடுகள் மட்டும் உள்ளன.  இந்திய மொழிகளில் தான் உயிர்மெய் எழுத்துகட்குத் தனி வரிவடிவம் உள்ளது.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள் 247.  இவற்றுள் அடிப்படை எழுத்துகளான உயிர், மெய், ஆய்த எழுத்துகள் 31 - க்கும் தேவைப்படுவன ஒரு புள்ளியையும் சேர்த்து 31 குறியீடுகள் [அட்டவணை 1].  மீதமுள்ள 216 உயிர் மெய் எழுத்துகட்குத் தேவைப்படுவன [4+72] அதாவது 76 குறியீடுகள் [அட்டவணை-2, அட்டவணை-3]. எனவே மொத்தம் (31+76) அதாவது 107 குறியீடுகள். இந்த 107 குறியீடுகளையும் கற்றால்தான் குழந்தைகள் தமிழ் வரிவடிவத்தைப் படிக்க முடியும். மெய்யெழுத்துகளைக் கற்றபின் இந்த 216 உயிர்மெய் எழுத்துகளையும். எழுதுவதற்கு உண்மையிலேயே தேவைப்படுவன 8 குறியீடுகள் மட்டுமே.  விபரம் பின் வருமாறு:

               

                மற்ற ஏழு உயிர்மெய் வரிசைகட்குப் பயன்படுத்துவது போல இந்த நான்கு வரிசைகட்கும் நான்கு குறியீடுகளைப் பயன்படுத்தினால், 72 - குறியீடுகள் என்பது நான்காகக் குறைந்துவிடும். அப்பொழுது 216 உயிர் மெய் எழுத்துகட்குத் தேவைப்படுவன 8 குறியீடுகள் மட்டும்தான்.  தமிழ் எழுத்துகள் 247 - க்கும் தேவைப்படுவன [31+8] என 39 குறியீடுகள்தான்.

            உயிர்மெய் இ கரம் [கி. . . . . னி], ஈ காரம் [கீ . . . . . னீ], உகரம் [கு . . . . . னு], ஊ காரம்  [கூ . . . .னூ]. ஆகியவற்றுக்கு நான்கு குறியீடுகளை நாம் உருவாக்க வேண்டும் இதைப் பற்றிப் பலர் ஆய்ந்திருக்கிறார்கள்.  எழுதியிருக்கிறார்கள்.  ஒரு கருத்துக்கணிப்பில்  அட்டவணை - 4 - இல் காணும் குறியீடுகள் பரவலான ஏற்பைப் பெற்றிருக்கின்றன.  இவற்றை மாற்றி இன்னும் சிறந்த குறியீடுகளை உருவாக்க முடிந்தால் செய்யலாம். இவை முடிவான குறியீடுகள் அல்ல.   இந்த அட்டவனையில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள தமிழ் வரிவடிவம் அட்டவனை 5 - இல் கொடுக்கப்பட்டுள்ளது.

      நாம் இதுவரை பரிந்துரைத்துள்ள சீர்திருத்தம் ஏற்கப்பட்டால் தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகள் முழுவதையும் எழுதக் குழந்தைகள் கற்க வேண்டியன அட்டவணை 6 - இல் கொடுக்கப்பட்டுள்ள 39 குறியீடுகள் மட்டுமே.  இங்கு புதுமையானதோ, புரட்சிகரமானதோ எதுவுமில்லை.  ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்கு முன் பெரியார் அவர்கள் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அமைந்தது தான் இந்த வரிவடிவச் சீர்திருத்தம். நாம் செய்ய வேண்டிய மாற்றம் ஆலின் விதை போன்றது: ஆனால் அதன் பயன் உண்மையிலேயே ஆல்போன்றது.

                தமிழ் ஒரு மாநில மொழி மட்டுமன்று.  உலகு தழுவி 60 - க்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் குவலயக் குடும்பத்தின்மொழி. எளிய வரிவடிவத்தைக் கொண்ட 26 எழுத்துகளில் ஆங்கிலத்தைக் கற்கும் இளைஞர்கள் 247 எழுத்துகளைக் கொண்ட வரிவடித்தைப் பார்த்து மருண்டு நிற்கிறார்கள். அவர்கட்கு வழிமறைக்கும் நந்தியாக வரிவடிவம் நிற்கிறது.  தமிழகத்திலும் 39 குறியீடுகளில் எழுதக் கூடிய மொழியைக் கற்க, 107 குறியீடுகளை ஒவ்வொரு ஆண்டும், தலைமுறை தலைமுறையாக இலட்சக் கணக்கான குழந்தைகளைக் கற்க வைப்பது காலத்துக் கேற்ற செயல் அன்று. காலத்தின் அருமை அறிந்த செயல் அன்று.  நாம் வாழ்வது அறிவுயுகம்.  விரைவே வெற்றியின் பாதை என்பது இன்றைய வேதம்.  நாம் வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.
      

நாம் கூறும் வரிவடிவச் சீரமைப்பை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்களில் முக்கியமானவை இரண்டு:

1.        நாம் தமிழ் வரிவடிவத்தைச் சிதைக்கிறோம்
2.        தற்பொழுது இருக்கும் வரிவடித்தில் உள்ள நூல்களைப் படிப்பது கடினம்: அவற்றை இழந்து விடுவோம்.

முதலாவதாக வரிவடித்தைச் சிதைக்கிறோம் என்பதை எடுத்துக் கொள்வோம். உண்மையில் அகரமுதல் னகரம்வரை உள்ள 30 எழுத்துகளில் எதன் வடிவத்தையும் நாம் எந்த விதத்திலும், அணுஅளவும் மாற்றவில்லை. உயிர்மெய் வரிசையில் தனியாக மற்ற எழுத்துகட்கு இருப்பது போலவே இகர, உகர வரிசைகட்கும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் தற்பொழுது உள்ள வழக்கில் குறிப்பாக உகர, ஊகார வரிசைகளில் 36 உயிர்மெய் எழுத்துகளையும், அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைத்து விடுகிறார்கள்.

இரண்டாவதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழக்கிழந்துவிடும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இன்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வரிவடித்தில் எழுதப்பட்ட திருக்குறள், 2000 ஆண்டுகட்கு முன்பிருந்து பனை ஓலைகளில் ஏறத்தாழ 100 ஆண்டுகட்கு ஒரு முறை மாற்றி எழுதப்பட்டு, எதுவும் கூடாது குறையாது நம்மை அடைந்திருக்கிறது. இன்றைய நிலைமை முற்றிலும் வேறு. தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வரையிலுள்ள காலப்பகுதியில் எல்லா நூல்களும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையத்தில் இருக்கின்றன. இடைக்கால இலக்கியங்களில் முக்கியமானவை 20-ஆம் நூற்றாண்டில் முக்கியமானவை, இணையத்தில் இடம் பெற்றுள்ளன. மென்பொருளில் செய்யும் ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இவையனைத்தையும் புதிய வரிவடித்தில் பதிப்பித்துவிடலாம். மேலும் இந்த மாற்றம் ஏதோ இரண்டொரு நாளில் நடந்துவிடுவது அன்று. படிப்படியாகக் குறைந்தது பத்தாண்டுகள் இரண்டு வரிவடிவங்களும் பயன்பாட்டில் இருக்கும். எனவே பழைய இலக்கியங்கள் வழக்கொழிந்துவிடும் என அஞ்சுவது தேவையில்லை. எந்தத் துறையில் மாற்றமானாலும் அதைச் செய்வதற்கும் இலக்கணம் இருக்கிறது, வழிமுறை இருக்கிறது. நாம் வரிவடித்தில் முன்பும் ஒருமுறை மாற்றம் செய்தோம். நாணயங்களில், நீள, அகலம் போன்ற அளவைகளில் நாம் மாற்றம் செய்தோம். எதையும் ஒரு நாளில் அல்லது ஒரு ஆண்டில் செய்து விடவில்லை.
                       

எழுத்துச்சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சியாகக் காண
http://www.tamilvu.org/esvck/index.htm